வேதாரண்யம்: மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் வயலில் தேங்கிய மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாரான 10ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தைப்படுகை, திட்டுப்படுகை, முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, நாணல்படுகை, அளக்குடி, மகேந்திரப்பள்ளி, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரின் காரணமாக இந்த பகுதிகளில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டது. அந்த பயிர்களை உரம், மருந்துகளை தெளித்து விவசாயிகள் காப்பாற்றினர்.
இந்நிலையில் இன்னும் 10 தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன் பெய்த மழையில் சாய்ந்து மழைநீரில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. இந்த பயிர்களில் இன்னும் தண்ணீர் வடியாததால் தொடர்ந்து மழை நீரில் மூழ்கி இருந்த 5,000 ஏக்கர் சம்பா தற்போது முளைக்க தொடங்கியதால் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி அந்த பயிர்களை அறுவடை செய்தாலும், அந்த கூலிக்கு கூட தேறாது. தங்களுக்கு உரிய இழப்பீடும், முழு காப்பீடு தொகையையும் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதே போல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம், உம்பளச்சேரி, மகாராஜபுரம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இந்த தண்ணீர் வடியாமல் இருந்ததால் நெல்மணிகள் முளைக்க ஆரம்பித்தது.
இதனால் விவசாயிகள் தண்ணீரில் மூழ்கி கிடக்கும் நெற்கதிர்களை இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாமல் கூலித்தொழிலாளிகளை கொண்டு முட்டியளவு தண்ணீரில் மிதக்கும் நெல்மணிகளை அறுவடை செய்கின்றனர். வயல்களில் இருந்து மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு திடீர் கனமழையால் ெதாழிலாளர்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வேளாண்மை துறை அதிகாரிகள் நீரில் மூழ்கிய நெற்கதிர்களை பார்வையிட்டு உடனே நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.