புதுடெல்லி: ‘10, 12ம் வகுப்புகளுக்கான 2ம் பருவத் தேர்வு தொடர்பாக ஆன்லைனில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்’ என்று சிபிஎஸ்இ அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டன. இந்த கல்வியாண்டில் பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத்தேர்வு கடந்தாண்டு நவம்பர், டிசம்பரில் நடைபெற்றது. 2வது பருவத் தேர்வு வரும் மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ 2ம் பருவத் தேர்வு முறை மாற்றம் குறித்த முக்கிய செய்தி என்று ஆன்லைனில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கை: ‘10, 12ம் வகுப்பு தேர்வுகளில் முக்கியத் தேர்வு முறை மாற்றம் குறித்து சில ஆன்லைன் ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவது தெரியவந்துள்ளது. சிபிஎஸ்இ 2வது பருவத் தேர்வு முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அறிவித்த அட்டவணைப்படி முதல் பருவத் தேர்வு நவம்பர், டிசம்பரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 2ம் பருவத் தேர்வும் கடந்தாண்டு அறிவித்தபடி நடைபெறும். எனவே, தேர்வு தொடர்பான தெளிவான தகவல்களை பெற சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்’.