×

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு: அகத்தியர் மலை புனித பயண முன்பதிவு திடீர் ரத்து

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து நாளை (6ம்தேதி) தொடங்குவதாக இருந்த அகத்தியர் மலை புனித பயண முன்பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், பாபநாசம் மலைக்கு மேல் முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் பொதிகை மலை உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 6,132 அடி உயரத்தில் அகத்தியர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வருடந்தோறும் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் புனிதப் பயணம் செல்வார்கள்.

இதற்காக கேரள வனத்துறையின் இணையதளம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வருட புனிதப் பயணம் ஜனவரி 14ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அகத்தியர் மலை புனிதப் பயணத்திற்கும் கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை தொடங்குவதாக இருந்த ஆன்லைன் முன்பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேரள வனத்துறை அறிவித்துள்ளது.

Tags : Agathiyar , Increase in Omigron Distribution: Sudden Cancellation of Agathiyar Hill Pilgrimage Booking
× RELATED கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்...