நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி வடக்கு மீனவர் கிராம கடற்கரையில் நேற்று மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதுபற்றி கீழையூர் கடலோர காவல்படை போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று மர்ம பொருளை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.
இதில், அந்த பொருள் துறைமுகத்தில் கப்பல் வரும்போது ஆழமான பகுதியை அடையாளம் காட்டுவதற்காக கடலில் மிதக்க விடப்படும் போயா எனப்படும் மிதவை பொருள் என்பது தெரியவந்தது. இதேபோல் அந்த கருவியில் பொருத்தப்பட்டிருந்த பெரிய அளவிலான சிலிண்டர் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கடற்கரையில் கரை ஒதுங்கி இருந்தது. கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் சென்று அந்த சிலிண்டரையும் கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.