தக்கலை : கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை வாகன போக்குவரத்து அதிகமுள்ள முக்கிய சாலையாகும். இந்த சாலையை தினமும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.இதன் வழியாகத்தான் திருவனந்தபுரம் விமான நிலையம், முக்கிய மருத்துவமனைகளுக்கு நேயாளிகளை கொண்டு செல்கின்றனர். இந்த தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களாக பல இடங்களில் தார் மற்றும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்து வருகிறது. தற்போது பெய்த கனமழையால் தக்கலை அருகே உள்ள மணலி பகுதியில் நெடுஞ்சாலையில் உள்ள குழிகள் மழை நீரால் சூழ்ந்து காணப்பட்டது.
பல இடங்களில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறை மவுனம் சாதித்து வந்தது. பள்ளங்களை பெயரளவில் கூட நிரப்பாமல் இருந்தனர். இதனிடையே இந்த சாலையை சரி செய்யும் முயற்சியில் தக்கலை டிஎஸ்பி கணேசன் 100 க்கும் போலீசார் மற்றும் விடுப்பில் இருக்கும் குமரி ஜவான்ஸ் அமைப்பை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் எர்த் மூவர்ஸ் சங்கம் சார்பில் லாரிகளை பெற்று, கல்குவாரி கழிவுகளை ஏற்றி வந்து சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.