×

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன?: முப்படையின் விசாரணை அறிக்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தாக்கல்..!!

டெல்லி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த முப்படையின் விசாரணை அறிக்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான முப்படையின் குழு விசரனை அறிக்கையை தந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த நச்சப்பசத்திரம் பகுதியில் கடந்த மாதம் 8ம் தேதி MI 17 ரக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் இதர 11 ராணுவ அதிகாரிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங், ஒரு வாரம் உயிருக்கு போராடி டிசம்பர் 15ம் தேதி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 14 பேரை பலி கொண்ட இந்த கோர விபத்து குறித்து தமிழ்நாடு போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க ஏர் மார்ஷல் மனவேந்திரா சிங் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. விபத்து நடந்த பகுதியில் கறுப்புப் பெட்டி மற்றும் ஹெலிகாப்டரில் உதிரி பாகங்களை மீட்டு இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.

தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை, விமானியின் தவறு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அந்த குழு விசாரணை நடத்திய நிலையில், தற்போது விபத்திற்கான காரணம் குறித்த விரிவான அறிக்கையை ஒன்றிய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங்கிடம் தாக்கல் செய்துள்ளது. வரும் காலத்தில் இதுபோன்று ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் வி.ஐ.பி.க்கள் பயணிக்கக்கூடிய விமானங்கள் உள்ளிட்டவை விபத்து நடைபெறாமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையும் விரிவாக தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Tags : Coonoor ,Defense Minister ,Rajnath Singh , Coonoor Helicopter, Troops, Investigation Report, Rajnath Singh
× RELATED குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் 8 நாட்கள் எரிந்த காட்டுத்தீ அணைந்தது