×

'நீட் தேர்வு வேண்டாம்'என்பதில் அரசு உறுதியாக உள்ளது!: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையை நிறைவு செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வணக்கம் என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது முதல்முறையாக உரையாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்  என்று கூறினார். கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த ஆளுநர், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவுக்கு தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளதாக பெருமிதம் கூறினார்.

தமிழ்நாட்டில் 8.55 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒமிக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில் தான் என்று ஆளுநர் கூறினார். தமிழ்நாட்டில் 86.95 சதவீதம் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாடு அரசு நிதியுதவி அளித்துள்ளது.

வருமுன் காப்போம் திட்டம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவர்கள் உயிரை காக்க நம்மை காப்போம் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான வருமான வரி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1297 கோடியில் 2.15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு வழங்குகிறது என்றார்.

ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் நடைமுறை ஜூன் மாதத்துக்குள் நிறுத்தம்:

* ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் நடைமுறை ஜூன் மாதத்துக்குள் நிறுத்திவிடும்.

* இன்னும் 3, 4 ஆண்டுகளுக்கு வருவாயை ஈடுகட்டும் வகையில் ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தர வேண்டும்.

* தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி டாலராக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் - 2.29 லட்சம் மனுவுக்கு தீர்வு:

* இந்தியாவில் சிறந்த முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2.29 லட்சம் மனுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

* அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை தமிழக அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது.

* எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கைப்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகளில் தமிழ் பயன்பாட்டை அரசு உறுதி செய்யும்

* ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும் என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

இல்லம் தேடி கல்வி திட்டம்: ரூ.200 கோடி ஒதுக்கீடு

* இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு முதற்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

* இடைநிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது என்று கூறினார்.

மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது:

* மேகதாது அணை கட்ட கர்நாடகாவை ஒன்றிய அரசு அனுமதிக்கக்கூடாது என்று ஆளுநர் ஆர்.ரன்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசு பள்ளிகளை நவீனப்படுத்த சிறப்பு திட்டம்:

* அரசு பள்ளிகளை நவீனப்படுத்த 5 ஆண்டுகளில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

 * 6,996 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள், கணினி கூடங்கள் அமைக்கப்படும்.

* அரசுப்பள்ளியில் படித்து 7.5சதவீத இடஒதுக்கீட்டில் தொழிற்படிப்பு சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணத்தை அரசே ஏற்கிறது.

* இன்றைய காலத்துக்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.

* தமிழ்நாட்டுக்கென தகவல் தொழில்நுட்ப கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

1,74,999 வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை:

* 1,74,999 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.66,230 கோடி முதலீட்டுக்கு 109 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

* ஒரு லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதற்கான 2 தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

* சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவது எளிதாக்கப்படும்.

* தமிழ்நாட்டில் 5 புதிய தொழிற்பேட்டைகள், சிட்கோ மூலமாக ரூ.241 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்.

* நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.160 கோடி தள்ளுபடி தொகை திரும்ப வழங்கப்படும்.

* இருமொழிக்கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கு புதிதாக ஒரு லட்சம் மின் இணைப்புகள்:

* விவசாயிகளுக்கு புதிதாக ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.

* 8,600 மின்மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்:

* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

* அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

* நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை அண்மையில் அரசு நடத்தி உள்ளது.

* மாநிலத்தின் வளர்ச்சியில் மக்கள் பங்கேற்கும் வகையில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்டுகிறது.

* 145 சமத்துவபுரங்களில் ரூ.92 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ஒன்றிய அரசு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும்.

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு:

* நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கொரோனா பேரிடரை தாதுக்க ரூ.541 கோடி செலவிடப்பட்டுள்ளது.

* புதிய சுற்றுலா கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

சென்னையை மேம்படுத்த சிங்கார சென்னை 2.0 திட்டம்:

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.

* நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்ட குடியிருப்புகளை பராமரிக்க நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

நெகிழிப்பைகள் பயன்பாட்டை ஒழிக்க மஞ்சப்பை திட்டம்:


* நெகிழிப்பைகள் பயன்பாட்டை ஒழிக்க மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

* குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன்:

* மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோயில்களில் புத்தக நிலையங்கள் திறக்கப்படும்.

* தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் குவாரிகள் நடத்த தடை விதிக்கப்படும்.

* கீழடி, ஆதிச்சநல்லூர் இடங்களில் கிடைத்த தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

அகில இந்திய அளவில் தொழிற்படிப்புகளில் 27சதவீத ஓ.பி.சி. இடஒதுக்கீடு பெற உறுதி:

* அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்கல்வி படிப்புகளிலும் ஓ.பி.சி.க்கு 27சதவீத இடஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

தடையில்லா மின்சாரம் - அரசு நடவடிக்கை:

* இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது.

* தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குடிசை இல்லா தமிழகம்:

* குடிசைகள் இல்லா தமிழகத்தை ஏற்படுத்துவதே முதலமைச்சரின் கனவு.

* வரும் பத்தாண்டுகளில் குடிசைகள் இல்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்பு:

* கோவில் நிலங்களை பாதுகாப்பதில் அரசு நடவடிக்கை சிறப்பாக உள்ளது.

* முக்கிய கோவில்களில் புத்தக நிலையங்கள் அமைக்கப்படும்.

* கோயில்களில் தல வரலாறு புத்தகங்களாக வெளியிடப்படும்.

விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம்:

* சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

* பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி ஊக்கத்தொகை, அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு கூடாது என்பதில் அரசு உறுதி:

* நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

* விளையாட்டு துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

* தெற்காசியாவிலேயே முன்னுதாரண மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கி அரசு உறுதி பூண்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

* ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.


Tags : Governor ,RN Ravi ,Legislative Assembly , NEET EXAMINATION, JUDGMENTS, GOVERNOR RN RAVI
× RELATED ராஜஸ்தான் தினத்தை ஒட்டி அம்மாநில மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!!