மதுரை: மதுரை அருகே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் வழங்கப்படாததை கண்டித்து கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள இரும்பாடி, கருப்பட்டி சுற்றுவட்டார பகுதியிலுள்ள அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்துள்ளனர். விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லுக்கான ரசீது வழங்கப்பட்ட நிலையில் அதற்கான முழுமையான பணம் வழங்காமல் விவசாயிகளிடமிருந்து தலா ரூ. 3,000 வரை மோசடி செய்யப்பட்டதாக தொடர்ந்து புகார் எழுந்தன.
இந்த நிலையில் நெல் மூட்டைகளுக்கான பணத்தை முறையாக வழங்கக்கோரி சோழவந்தான் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர் கூட்டுறவு சங்கம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் அரசின் நெல்கொள்முதல் நிலைய முறைகேட்டால் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக விவசாயிகள் கண்ணீர் விட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.