கோவை: யூ டியூபில் ஆபாசமாக பேசிய ‘‘டிக் டாக்’’ ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பரை கோவை போலீசார் கைது செய்தனர். மதுரையை சேர்ந்தவர் ரவுடி பேபி சூர்யா (35). ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர். இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி தனது பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளதாக தெரிகிறது. கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசியுள்ளாராம். சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தர் (45) என்பவரும் அந்த பெண்ணை தகாத முறையில் யூ டியூபில் பேசியுள்ளனர்.
இது தொடர்பாக அந்த பெண்ணும், அவரது கணவரும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், ரவுடி பேபி மற்றும் சிக்கந்தர் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் ஜெயதேவி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இந்த நிலையில் மதுரையில் பதுங்கியிருந்த சூர்யா, சிக்கந்தரை சைபர் கிரைம் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.