சூலூர்: மின் வாரியத்தில் காலிபணியிடங்களை நிரப்பியவுடன் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். கோவை மாவட்டம் சூலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் சமீரன் முன்னிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் அளித்த பேட்டி: உயர் மின் கோபுரம் விவகாரத்தில் இழப்பீடு பெற்ற விவசாயிகள் போராடுவது நடைமுறையில் இல்லாதது. அந்த கோரிக்கையை ஆய்வு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் அவர்களுக்கு இழப்பீடு போதவில்லை என்று சொன்னால் நீதிமன்றத்தை நாட வேண்டும். அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். இது குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும்.
மின் வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்பியவுடன் மாதந்தோறும் மின் கணக்கிடும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். 50 சதவீத கணக்கீட்டாளர் பற்றாக்குறை உள்ளது. வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் சிறப்பு வாய்ந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்டர் பொருத்தும் போது கணக்கீட்டாளர் பணிக்கு ஆட்கள் பூர்த்தி செய்ய அவசியமில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.