×

7 முறை உபரிநீர் திறந்து விடப்பட்டும் முழு கொள்ளளவில் அமராவதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை: உடுமலை அமராவதி அணையில் 7 முறை உபரிநீர் திறந்து விடப்பட்டும், நீர்மட்டம் முழு கொள்ளளவில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுதவிர, கல்லாபுரம், ராமகுளம் நேரடி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை காலம் அணைக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், பாம்பாறு, கூட்டாறு, தேனாறுகளில் நீர் பெருக்கெடுத்து, தூவானம் அருவி வழியாக அணைக்கு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் கணிசமான அளவு நீர்வரத்து இருக்கும்.
கடந்த ஆண்டு (2021) தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்ததால் அமராவதி அணை நிரம்பியது. கடந்த சில வாரங்களாக அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் இருந்து வருகிறது. அணை நிரம்பி, 7 முறை  உபரிநீர் திறந்து விடப்பட்டது.

நேற்று அணையின் நீர்மட்டம் 88.65 அடியாக இருந்தது. 1747 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 221 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதுவரை இல்லாத அளவு அமராவதி அணை நீர்மட்டம் அதிகபட்ச நாட்கள் முழு கொள்ளளவில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Amravati Dam , Amravati Dam at full capacity with 7 overflow openings: Farmers happy
× RELATED அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கனஅடி நீர்திறப்பு..!!