தென்காசி: தென்காசி பழைய பஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், சுமார் 21 கிலோ எடை கொண்ட ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல கழிவை பதுக்கி, கேரளாவிற்கு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.3.5 கோடியாகும் என தெரிகிறது.
விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல்ரோஸ், நெல்லை தாழையூத்தை சேர்ந்த மோகன் என்பதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். திமிங்கல கழிவு மற்றும் கார் ஆகியவை கடையநல்லூர் வனச்சரக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த திமிங்கலத்தின் கழிவு சர்வதேச அளவில் விலை மதிப்புடையதாக கருதப்படுகிறது. இதன்மூலம் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.