×

465வது கந்தூரி விழா நாகூர் தர்காவில் இன்று மாலை கொடியேற்றம்: 13ம் தேதி சந்தனக்கூடு ஊர்வலம்

நாகை: நாகூர் தர்கா கந்தூரி விழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது.நாகை மாவட்டம் நாகூரில் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு தினமும் வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறும்.இந்தாண்டு 465வது கந்தூரி விழா இன்று (4ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முன்னதாக கடந்த 1ம் தேதி 5 மினராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை கொடியேற்றத்தையொட்டி நேற்றிரவு நாகை பே குளம் அருகில் வாணவேடிக்கை நடந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாகை ஜமாத்தில் இருந்து நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட கப்பல் பல்லக்கு,  செட்டி பல்லக்கு, சாம்பிராணி பல்லக்கு உள்ளிட்ட 5 பல்லக்குகளில் மட்டும் கொண்டு வர நாகை மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதையடுத்து இன்று மாலை 4 மணியளவில் நாகையில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நாகூரை சென்றடைகிறது. இதன் பின்னர் நாகூரில் முக்கிய வீதிகளில் ஊர்வலம் செல்லாமல் அலங்கார வாசலோடு கொடி ஊர்வலம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 5 மினாரக்களில் ஒரே நேரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 13ம் தேதி இரவு நடைபெறுகிறது. 14ம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் சன்னதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. 15ம் தேதி கடற்கரைக்கு பீர் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17ம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

Tags : 465th Kanduri Festival ,Nagur Dharga ,Sandanakudu , 465th Kanthuri Festival at Nagore Dargah Flag hoisting this evening: Sandalwood procession on the 13th
× RELATED ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்