×

அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோயில் பணியாளர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (4.1.2022) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில்  அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / ஓதுவார்கள் / பூசாரிகளுக்கு புத்தாடைகளையும்,  திருக்கோயில் பணியாளர்களுக்கு  நபர் ஒருவருக்கு  இரண்டு எண்ணிக்கையிலான சீருடைகளையும் வழங்கிடும் அடையாளமாக 12 நபர்களுக்கு  புத்தாடைகள் மற்றும் சீருடைகளை  வழங்கினார்.   

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் பணிப்பட்டியலின்படி பணிபுரியும் அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / ஓதுவார்கள் / பூசாரிகளுக்கு புத்தாடையும் மற்றும்  திருக்கோயில் பணியாளர்களுக்கு  நபர் ஒருவருக்கு  இரண்டு எண்ணிக்கையிலான சீருடைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

திருக்கோயில்களில் பணிபுரியும்  அனைத்து பணியாளர்களையும் திருக்கோயிலுக்கு வருகைபுரியும் பக்தர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், அர்ச்சகர்/பட்டாச்சாரியார்/பூசாரிகளுக்கு மயில்கண் பார்டர் பருத்தி வேட்டியும், பெண் பூசாரி  மற்றும் திருக்கோயிலில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவையும், ஆண் பணியாளர்களுக்கு பழுப்பு (Brown) நிற கால்சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணியும் வழங்கப்படுகிறது. இதன்மூலம், 36,684 திருக்கோயில்களில் பணிபுரியும் சுமார் 52,803 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளிலிருந்து பணிக்கு வரும் போது பணியாளர்கள் அணிந்து வரும் வகையில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.


Tags : CM ,Stalin , மு.க ஸ்டாலின்
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...