புதுடெல்லி: `லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகளை கொன்ற வழக்கில், குற்றவாளிகளை மோடி அரசு பாதுகாக்கிறது. அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்க வேண்டும்,’’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், ``லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் 5,000 பக்க குற்றப்பத்திரிகை வீடியோவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், மோடி அரசு குற்றவாளிகளை பாதுகாக்கிறது. இதற்கு நாடு சாட்சியாகும்,’’ என்று கூறியுள்ளார்.
அத்துடன் அஜய் மிஸ்ராவை பதவி நீக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்து பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா, `லக்கிம்பூர் படுகொலை விவகாரத்தில், பிரதமர் மோடியின் தயவால், உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா புலன் விசாரணையில் இருந்து தப்பி உள்ளார். அஜய் மிஸ்ரா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்,’’ என்று கூறியுள்ளார்.