திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சமீபத்திய மழையால், இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பியது. அதே நேரத்தில் காக்களூர் தொழிற்பேட்டை பகுதியிலும், காக்களூர் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழந்தது. அதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் காக்களூரில் உள்ள சுடுகாடு முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதால், ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் உடலை புதைப்பதற்கோ எரிப்பதற்கோ மிகுந்த சிரமத்துக்கு பொதுமக்கள் ஆளாகின்றனர். ஏற்கனவே புதைக்கப்பட்ட உடல்களும் அழுகிய நிலையில் மிதக்கும் நிலையும் உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில், சுடுகாட்டை ஒட்டியுள்ள ஏரியை குடிமராமத்து பணியின் மூலம் தூர் வாராததே இதற்கு காரணம். அதனால்தான் சுடுகாடு முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. உடல்களை புதைக்க முடியாமலும் எரிக்க முடியாமலும் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஏரியின் கலங்கள் மூலம் தண்ணீர் செல்ல வழிவகை செய்வதோடு, சுடுகாட்டு பிரச்னைக்கு தீர்வு காணும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.