×

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு தயக்கமின்றி அபராதம் வசூலியுங்கள்!: சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தல்..!!

சென்னை: கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு தயக்கம் இன்றி அபராதம் விதிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை காலகட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்தன. தற்போது அபராதங்களில் தளர்வுகள் காட்டப்பட்டு வந்த நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதால் அவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும்,  தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் அரசு வலியுறுத்தி வருகிறது. வருகின்ற 10ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா தடுப்பு விதிகள் வகுத்து அளிக்கப்பட்டிருக்கின்றன. கூட்டம் கூடுவதற்கான விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த விதிகளை மீறுவோருக்கு தயக்கமின்றி அபராதம் வசூலிக்க சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கூடுதலாக 50,000 படுகைகளை ஏற்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.


Tags : Health Secretary , Secretary of Corona Prevention, Fines, Health
× RELATED வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதியில்...