×

தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் சார்பதிவாளர் ஆபிசில் 585 பேர் பணியிட மாற்றம்: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடி நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் கேமராக்களை இயக்கவும், கணினி சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும் ஒப்பந்த அடிப்படையில் 727 கணினி உதவியாளர்கள் மற்றும் 575 கேமரா ஆபரேட்டர்கள் என மொத்தம் 1,302 பேர் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கணினி உதவியாளர்கள் கேமரா ஆபரேட்டர்கள் சிலர் இடைத்தரகர்கள் உடன் இணைந்து கொண்டு செயல்படுவதாக, பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் பணம் கேட்பதாக பதிவுத்துறை தலைமைக்கு புகார் வந்தது. இதில், சார்பதிவாளர்கள் சிலர் பணம் கேட்பதாக கூறி ஆபரேட்டர்கள் வசூல் செய்து வருவதாகவும் கூறப்பட்டது.மேலும், இந்த ஆபரேட்டர்கள் பலரும் சார்பதிவாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களாக உள்ளனர்.

எனவே, அவர்களை வைத்து தான் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் பலர் குறைதீர் முகாமில் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கணினி உதவியாளர், கேமரா ஆபரேட்டர்களை பணி மாறுதல் செய்ய அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் சென்னை மண்டலத்தில் 65 பேரும், கோவை மண்டலத்தில் 57 பேரும், கடலூர் மண்டலத்தில் 61 பேரும், மதுரை மண்டலத்தில் 103 பேரும், சேலம் மண்டலத்தில் 62 பேரும், தஞ்சாவூர் மண்டலத்தில் 50 பேரும், திருநெல்வேலி மண்டலத்தில் 86 பேரும், திருச்சி மண்டலத்தில் 56 பேரும், வேலூர் மண்டலத்தில் 45 பேர் என மொத்தம் 585 பேரை பணியிடமாற்றம் செய்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். பணி மாறுதல் செய்யப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Sivan Arul , Tamil Nadu, Delegate, Change of Workplace, Registrar IG Sivan Arul
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...