சென்னை: சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாத்திமா லத்தீப் மரணம் விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று முதல்வருக்கு எஸ்.டி.பி.ஐ.கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: சென்னை ஐஐடியில் எம்.ஏ. மானிடவியல் துறையில் படித்து வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள தனது அறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த சி.பி.ஐ. தனது விசாரணயை முடித்துள்ளது. வீட்டை பிரிந்திருந்த காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலையில் ஈடுபட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
மாணவி பாத்திமா தனது மரணத்திற்கு காரணம் பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் தான் காரணம் என்று தனது மொபைலில் குறிப்பெழுதி வைத்திருந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்த புகார் மீது சிபிஐ உரிய விசாரணை மேற்கொண்டதாக தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியரை காப்பாற்றும் விதத்தில் தற்போது சிபிஐ விசாரணை நடந்து முடிந்துள்ளது. மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழக முதல்வரை சந்தித்து அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியிருந்த நிலையில் தற்போது சிபிஐ விசாரணை முடித்துவைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திடும் வகையில், மாணவியின் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.