கொல்கத்தா: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் தாக்கம் காரணமாக கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா, போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பால் மேற்கு வங்காளத்திலும் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்கு வங்காளத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சள் குளங்கள், அழகு நிலையங்கள் போன்றவையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்றலாம். இங்கிலாந்தில் இருந்து வரும் நேரடி விமானங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது” என்பன போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.