கம்பம்: கம்பம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சுருளி அருவி நாளை திறக்கப்படுகிறது. தேனி மாவட்டம், கம்பம் அருகே, பிரசித்தி பெற்ற சுருளி அருவி உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, 2020 ஏப்ரல் முதல் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கு தளர்வால், அருவியில் குளிக்க தடை விதித்து, வளாக பகுதிகளுக்குள் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 2 மாத காலத்திற்கு பின் மீண்டும் அருவி மூடப்பட்டது. இதனால், வேலை வாய்ப்பு பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சுருளி அருவியை திறக்கக்கோரி பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சுருளி அருவி நாளை (ஜன.3) திறக்கப்பட உள்ளதாகவும், அதற்கான உத்தரவு வந்துள்ளதாகவும், வனத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.