×

நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்: புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார்

சென்னை: நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை விஜயகாந்த் நேற்று சந்தித்தார். அப்போது அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டும் வருகிறார். இதனால், அவர் வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வெகுவாக குறைத்தும் வந்தார். மேலும் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றார். இந்த நிலையில் அவர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். தொடர்ந்து கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஆங்கிலப் புத்தாண்டான நேற்று விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் தொண்டர்களை பார்த்து கையை அசைத்தும், கையெடுத்து கும்பிட்டும், அவர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தொண்டர்களை சந்தித்து மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தினார். அது மட்டுமல்லாமல் தொண்டர்களுக்கு புத்தாண்டு காலண்டர் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இது தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : Vijaykanth ,New Year , Volunteers, Vijaykanth, Happy New Year
× RELATED விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி