வத்தலக்குண்டு: உத்தரபிரேதச மாநிலம், கான்பூரில் சென்ட் தயாரிப்பு அதிபர் பியூஷ் ஜெயினின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.177 கோடி பணம் சிக்கியது. அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் நேற்று நாடு முழுவதும் உள்ள பியூஷ் ஜெயினின் உறவினர்கள் மற்றும் அவருடன் வர்த்தக தொடர்பில் உள்ளவர்களின் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே வத்தலகுண்டு - நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள சென்ட் தயாரிப்பு தொழிற்சாலையில் 12 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் நேற்று காலை முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த தொழிற்சாலையில் உள்ள ஆவணங்கள் முழுவதையும் கைப்பற்றி சரி பார்த்து வருகின்றனர். மேலும் தொழிற்சாலையின் மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த ஆலை கடந்த 4 நாட்களாக பூட்டியிருந்தது. நேற்று பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.