சென்னை: சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 32 பேர் கொரோனா தொற்று காரணமாக, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பி.பி.கிட் அணிந்து வார்டுக்கு சென்று பார்வையிட்டார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மாணவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட 32 மாணவர்களுக்கும் சிறிய அளவிலான அறிகுறிதான் உள்ளது. அனைவரும் நலமோடு இருக்கிறார்கள். இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் 9 மாதங்கள் கழித்து பூஸ்டர் போட்டுக் கொள்ளலாம். மேலும் பூஸ்டர் தடுப்பூசி குறித்த முழு விரவங்கள் இரண்டு நாட்களில் வெளியிடப்படும். கல்லூரியை பொறுத்தவரையில் 44% முதல் தவணையும் 12% இரண்டாம் தவணையும் தடுப்பூசி போட்டுள்ளனர்’’ என்றார்.