மும்பை: பிரதமர் மோடி ஏன் மாஸ்க் போடவில்லை என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத், நாசிக்கில் நிருபர்களிடம் கூறுகையில், ‘பிரதமர் மோடி பொது மக்களை முகக் கவசம் அணியுமாறு கூறுகிறார். ஆனால் அவரே முகக் கவசம் அணிவது இல்லை. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே முகக் கவசம் அணிகிறார். ஆனால் மோடி தான் நாட்டின் தலைவர். எனவே மோடியை பின்பற்றுகிறேன் எனக்கூறி பொதுமக்களும் முகக் கவசம் அணிவதில்லை. எனவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடை உத்தரவுகள் அமலில் உள்ளன. இருந்தாலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், பகல் நேரத்தில் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்க கூடாது என்று விரும்புகிறேன். தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, அவரது கணவர், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரஜக்த் தான்புரே, வர்ஷா கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.