சென்னை: அண்டை மாவட்டங்களில் பெய்த கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் செம்பரம்பாக்கம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் நேற்று தொடர் கனமழை பெய்தது. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்தது.
திடீரென பெய்த மழையால் காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து மொத்த கொள்ளளவான 24 அடியை எட்டியது. மழையால் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,000 கனஅடியாக உள்ளது. ஏரிக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதேபோல, திருவள்ளுர் மாவட்டம் புழல் ஏரிக்கு வினாடிக்கு 3,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் புழல் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே, நாரவாரிக்குப்பம், வடகரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மற்றொரு ஏரியான சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கன அடியாக அதிகரித்தது. அந்த நீர் அப்படியே கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.முன் எப்போதும் இல்லாத வகையில் டிசம்பர் மாத இறுதியில் பெய்த திடீர் மழையால் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய 4 ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.