நாகர்கோவில்: குமரியில் மணமகன் வீட்டினருக்கு வீடியோ அனுப்பி இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய தொழில் அதிபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சிதறாலை அடுத்த வெள்ளாங்கோட்டை சேர்ந்தவர் சுனில் குமார்(39) (பெயர் மாற்றம்) . இவர் பெங்களூரில் ஏ.சி சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவரது நிறுவனத்தில், பூட்டேற்றி பகுதியை சேர்ந்த 27 வயது பெண் பணியாற்றியுள்ளார். இந்த பெண்ணிற்கு கொற்றியோடு பகுதியை சேர்ந்தவருடன், திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. ஆனால், சுனில்குமார், நீ இருந்தால்தான் என் தொழில் சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். உன்னை 2வதாக திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதற்கு இளம்பெண் உடன்படவில்லை. இதனால், சுனில்குமார், இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று, அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். திருமணத்தை நிறுத்தாவிட்டால், இந்த வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 4ம்தேதி வேலையை விட்டு இளம்பெண் பூட்டேற்றிக்கு வந்துவிட்டார். சுனில்குமார் 6ம் தேதி இளம்பெண்ணின் மாமாவிற்கு போன் செய்து, ஒழுங்காக திருமணத்தை நிறுத்தி விடுங்கள். இல்லாவிட்டால், இளம்பெண்ணுடன் உள்ள வீடியோவை, இணைய தளத்தில் பரப்புவதுடன், முகத்தில் திராவகம் வீசி தீர்த்து கட்டுவேன் என மிரட்டியுள்ளாராம். மேலும் மாப்பிள்ளை வீட்டிற்கு தான் பதிவு செய்திருந்த வீடியோவை அனுப்பியுள்ளார். இதனால், கடந்த 23ம் தேதி நடைபெற வேண்டிய திருமணம் நிறுத்தப்பட்டது. இது குறித்து நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீசில் இளம்பெண் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சுனில்குமாரை தேடி வருகின்றனர்.