புதுடெல்லி: அடுத்தாண்டு ஒன்றிய பட்ஜெட்டுக்கான ஆலோசனை கூட்டத்தை டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நடத்தினார். இதில், அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கூட்டத்தில் பேசியதாவது: பகிரப்படாத செஸ் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 6.26 சதவீதமாக இருந்த இந்த வரி தற்போது 19.9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இதில் மொத்தமாக வசூலிக்கப்படும் வரித்தொகையை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அதை அடிப்படை வரியுடன் இணைக்க வேண்டும். மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பை சரிக்கட்ட இழப்பீடு தொகை வழங்குவதை 2022 ஜூன் மாதத்திற்கு மேலும் நீட்டிக்க வேண்டும். தமிழத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை இழப்பீட்டு தொகையான ரூ.16,725 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். நேரடி வரியை விட மறைக வரிகள் தற்போது அதிகரித்துள்ளது. இது ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. எனவே, நேரடி வரி மற்றும் மறைமுக வரியை 60:40 என்ற விகிதாச்சார அடிப்படையில் நிர்வகிக்க வேண்டும்.
ஜவுளித் துறையின் ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தியதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இது, சிறு குறு தொழில் துறையில் மிகப்பெரிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே, கடுமையான நிதி சுமையில் உள்ள இந்த துறையினருக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் ஒன்றிய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்கான அமைப்புகள் இயங்குவதற்கு தமிழக அரசு இலவசமாகவோ அல்லது சலுகை விலையிலோ நிலங்களை வழங்கியது. ஆனால், தற்போது அந்த நிறுவனங்கள் தனியார் மயமாக்கி விட்டதால் தற்போதைய சந்தை மதிப்பில் அந்த நிலத்தின் விலையை தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.
Tags : Tamil Nadu ,Finance Minister ,Union Government , Rs 17,000 crore should be provided immediately for Tamil Nadu projects: Finance Minister of Tamil Nadu urges the Union Government