×

11 நாட்களாக நடைபெற்று வந்த ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்: ஜனவரி 3-ம் தேதி முதல் கடலில் மீன்பிடிக்கச் செல்வதாக அறிவிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 11 நாட்களாக நடந்து வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜனவரி 3-ம் தேதி முதல் கடலில் மீன்பிடிக்கச் செல்ல மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக மீனவர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 68 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை கடற்படையால் கைதான 68 மீனவர்களை விடுவிக்கக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.

இதனிடையே 68 மீனவர்களை விடுவிக்க உத்தரவிட கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன்திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்  செய்தார். அதில், ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 68 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மீனவர்கள் மீது இலங்கை நாட்டின் சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளித்தது ஏற்புடையதல்ல.

இந்திய மீனவர்களை பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் உள்ளிட்டோர் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளனர். குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடற் படையினரால் சுடப்பட்டதில் ஒருவர் இறந்தார். இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்ட ஒன்றிய அரசு, பாகிஸ்தான் தூதரை அழைத்து கடுமையாக எச்சரித்தது. ஆனால், நமது மீனவர்கள் 68 பேரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு 68 இந்திய மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

அப்போது நீதிபதிகள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு தரப்பில், தமிழக முதல்வர் 68 மீனவர்களையும் இலங்கையில் இருந்து இந்தியா அழைத்து வர மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில், 68 மீனவர்களை இந்தியா கொண்டு வருவதற்காக இலங்கை வெளியுறவு துறையுடன் தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ஜனவரி மாத தொடக்கத்திலேயே 68 மீனவர்களும் அவர்கள் குடும்பத்தை சந்திக்க துரிதமாக நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் விரிவான பதில் மனுவை நாளை மறுநாள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 31ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தியில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மீனவர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Rameswaram , Rameswaram, fishermen, strike
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...