×

கோட்டக்குப்பம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு: தூண்டில் வளைவு அமைத்து தர கோரி மக்கள் சாலை மறியல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சின்னமுதலியார் குப்பம் சாவடியில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவர்கள் நீண்ட நாட்களாக தங்களது கிராமத்திற்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்தனர். கடல் சீற்றம் அதிகமாக ஏற்படும் காலங்களில் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து விடுவதால், தங்களால் கடலோரத்தில் வசிக்க முடியவில்லை, எனவே இதனை தடுக்கும் பொருட்டு தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலவருடமாக போராடி வருகிறார்கள். இருந்த போதிலும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் அக்கிராமத்தை  சேர்ந்த மீனவர் மூர்த்தி உட்பட சக மீனவர்கள் என 4 பேர் படகில் இன்று காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார். அப்போது கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் கடலுக்குள் விழுந்த நிலையில், 3 மீனவர்கள் நீந்தி கரை வந்தனர். ஆனால், மீனவர் மூர்த்தி மட்டும் கடலில் சிக்கி இறந்துவிட்டார். இது குறித்து தகவலறிந்து, சுமார் 500க்கும் மேற்பட்ட அப்பகுதி மீனவ மக்கள் மூர்த்தியின் சடலத்தை மீட்டு கிழக்கு கடற்கரை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஏனென்றால், புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு ஏராளமான வாகனங்கள் செல்வது வழக்கம், அதனடிப்படையில் அதிகாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி, பணிக்குச் செல்வோர் வாகனம், சென்னைக்குச் செல்லும் பேருந்துகளும் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து இருபுறமும் பாதிக்கப்பட்டது.

இதையடித்து, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள், தங்களின் நீண்டநாள் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்; அதற்கு உறுதியளித்தால் நாங்கள் செல்கிறோம் என கூறினர். இதனால் மீனவர்களுக்கும்- போலீசிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்த கோட்டகுப்பம் டி.எஸ்.பி. அருண் சம்பவ இடத்திற்கு வந்து, தனிப்பட்ட முறையில் அங்கிருந்த மீனவர்களிடம் பேசிய அவர், விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திடம் தங்களின் கோரிக்கையை கூறியதாகவும் விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார். இதனால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.பின்பு, போலீசார் மீனவர் மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 1 மணிநேரம் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது அந்த பகுதியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது.                


Tags : Kottakupam , Fort, boat, fisherman casualties, bait curve, people, road block
× RELATED 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி...