×

புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபட தடை இல்லை - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

சென்னை: புத்தாண்டு அன்று கோவில்களில் வழிபடுவதற்கு தடையில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோயில் நிலங்களை கண்டறிவது தொடர்பாக வட்டாட்சியர்கள் உடனான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் சேகர் பாபு வருவாய் துறையுடன் இணைந்து 36 வட்டாட்சியர்களை நியமித்து இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்களில் வழிபடுவதற்கு தடையில்லை என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக தமிழக அரசு கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தினார்.

ஜனவரி 1 புத்தாண்டையொட்டி அனைவரும் கோவிலுக்கு செல்வது வழக்கம். மக்கள் தற்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு, கூட்ட நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அவ்வாறு திருக்கோயில்களில் தரிசனத்திற்கு செல்பவர்கள் முதல்வரின் அறிவுரைப்படி முகக்கவசம் அணிந்து கூட்ட நெரிசல் ஏற்படுத்தாமல், சமூக இடைவெளியை பின்பற்றி கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். நாடு நலம் பெற, மக்கள் வளம் பெற வருகின்ற ஆண்டு நல்லாண்டாக அமைவதற்கு திருக்கோயில்களில் தரிசனத்திற்கு செல்பவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்கின்ற அனைத்து வழிமுறைகளையும் கையாள வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு வலியுறுத்தியுள்ளார்.

Tags : New Year ,Minister ,Sekar Babu , temple
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!