காஞ்சிபுரம்: மத்திய அரசு சார்பில், ஒமிக்ரான் பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழகத்துக்கு அனுப்பியது. இதைதொடர்ந்து, மத்திய குழுவில் உள்ள மருத்துவர்கள் வனிதா, பிரபா, சந்தோஷ், தினேஷ்பாபு ஆகியோர் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெரும்புதூரில் செயல்படும் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டனர். பின்னர், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ கட்டமைப்புகளை ஆய்வு செய்து,
கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை பிரிவு, ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கூடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மருத்துவமனை அதிகாரிகளுடன், மருத்துவமனையின் தேவைகள், ஓமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மத்தியக்குழுவின் ஆய்வின்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சித்திரசேனா, தொற்றுநோய் தடுப்பு இணை இயக்குனர் சம்பத், குடும்ப நலத்துறை துணை இயக்குநர் விஜயகுமார், மண்டல மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் உள்பட பலர் இருந்தனர்.