ஆம்பூர் : மாதனூரில் பாலாற்று வெள்ளத்தில் சுடுகாடு அடித்து செல்லப்பட்ட நிலையில் எரிமேடையுடன் கூடிய நிரந்தர மயானம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதனூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் பாலாற்றில் இருந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. மேலும், காவிரி குடிநீர் ராட்சத பைப்புகள் இடம் பெயர்ந்து சேதமடைந்தன. இந்நிலையில், அந்த பகுதியினர் பயன்படுத்தி வந்த பாலாற்றங்கரையோரம் இருந்த மயானமும் அடித்து செல்லப்பட்டது.
இதன் காரணமாக இறந்தவர்களின் சடலத்தை புதைக்கவோ அல்லது எரியூட்டவோ இயலாத நிலை இருந்து வருகிறது. இதை தொடர்ந்து அப்பகுதியினர் விடுத்த கோரிக்கையின் பேரில் தற்காலிகமாக சடலங்களை எரியூட்டவும் புதைக்கவும் ஆற்று படுகையை ஒட்டி உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. இதனால், அந்தபாலாற்றை ஒட்டி உள்ள இடத்தில் வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். எனவே, தங்களுக்கு உரிய எரிமேடையுடன் கூடிய மயானத்தை அமைத்து தர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.