பெரம்பலூர் : பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கம் ஒரே பொழுது போக்கு சிறுவர்அறிவியல் பூங்கா திறக்கப்படாததால் அத்துமீறி சுற்று சுவரை தாண்டி குதித்து உள்ளே சென்று நகரவாசிகள் ஊஞ்சலாடுகின்றனர்.பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கடந்த திமுக ஆட்சியில், நகர் ஊரமைப்பு துறை வளர்ச்சி நிதி உதவியால் ரூ27.50 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா மற்றும் தோட்டம் அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய கலெக்டர் நந்தக்குமார் இந்த சிறுவர் பூங்காவை, அறிவியில் உப கரணங்களுடன் கூடுதல் நிதியை கொண்டு தரம் உயர்த்தி சிறுவர் அறிவியல் பூங்காவாக மாற்றியமைத்தார்.
சுமார் 75 ஆயிரம் பேர் வசிக்க கூடிய, மாவட்ட தலைநகரான பெரம்பலூரில் பொதுமக்களுக்கான ஒரே பொழுது போக்கு வசதியாக இந்த சிறுவர் அறிவியல் பூங்கா மட்டுமே உள்ளது. தினமும் மாலையில் நூற்றுக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் இங்கு வந்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பூங்காக்களில் அமர்ந்து சிற்றுண்டிகளை குழந்தைகளுக்கு அளித்துவிட்டு இளைப்பாறி செல்லுவர்.
கொரோனா தொற்று பரவல் தடை காரணமாக பூட்டப்பட்ட இந்த சிறுவர் பூங்கா இன்னும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. கடந்த ஜூலை முதல்வாரம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளிலேயே பூங்காக்கள் திறந்து செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் ஏனோ கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா இன்னமும் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது.
இதனால் பொறுத்துக்கொள்ள முடியாத பொதுமக்கள் கடந்த சில தினங்களாக கோர்ட் சாலை வழியாக சுற்றுச் சுவரை தாண்டிக்குதித்து உள்ளே சென்று ஊஞ்சலாடி உற்சாகம் அனுபவித்து வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்கள் கூட காம்பவுண்டு சுவரை தாண்டி ஆபத்தான கம்பி வேலியையைக் கடந்து உள்ளே சென்று பொழுதைப் போக்கி வருகின்றனர். விபரீத முயற்சியால் விபத்துகள் நேரும்முன்பாக இதனை தடைபோட்டுத் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதனை சுகாதாரதுறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி திறப்பதற்கு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.