×

வலங்கைமான் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள், மாடு மர்மசாவு-போலீசார் விசாரணை

வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த ஆதிச்ச மங்கலம் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பத்து ஆடு மற்றும் ஒரு மாடு மர்மமான முறையில் இறந்து தொடர்பாக வலங்கைமான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆதிச்ச மங்கலம் கீழ ஆதிதிராவிடர் தெரு பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயக் கூலித் தொழிலாளிகளான இவர்கள் ஆடு மாடு கோழி உள்ளிட்டவைகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் நேற்று வழக்கம்போல் ஆடு,மாடுகளை சாலைஓரங்கள் மற்றும் வாய்க்கால் ஓரங்களில் மேய்வதற்காக விட்டுள்ளனர்.

இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் சாலைகளில் வாயில் நுரை தள்ள மயங்கி கீழே விழுந்துள்ளது. அப்பகுதிகளை சேர்ந்த ராமையன், ஜானகி, மகேந்திரன், பாஸ்கர், மருதமுத்து ஆகியோரின் 10 ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து இறந்துள்ளது. மேலும் பாஸ்கர் என்பவரின் மாடு வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்தது. இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த மாட்டிற்கு சந்திரசேகரபுரம் கால்நடை மருத்துவமனை உதவி கால்நடை மருத்துவர் தன்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர சிகிச்சை அளித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பசுமாடு உயிரிழந்தது. இறந்து போன ஆடு மற்றும் மாடுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்குமென கூறப்படுகிறது.

விளைநிலங்களில் பூச்சிமருந்து தெளிக்கப்பட்ட பயிர்களை தின்று மாடுகள் ஆடுகள் உயிர் இழப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் அதிக நச்சுத்தன்மை கொண்ட மருந்தினை வயல் ஓரங்களில் தெளித்து இருந்திருக்கலாம் என்றும் அவற்றை மேயும் போது ஆடு மாடுகள் உயிரிழந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் வலங்கைமான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கிடவும் ஆடு மாடுகள் கால்நடைகள் உயிரிழப்பு காரணமானவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டோர் கூறியுள்ளனர்.

Tags : Valangaiman ,Marmasavu , Valangaiman: Ten goats and a cow that went for grazing in Valangaiman next Adicha Mangalam area mysteriously died
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு