திருமலை: ஜாமீனில் வெளியே வந்த தலைவர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்று விஜயவாடாவில் பாஜ மக்கள் ஆதரவு கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசினார். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் பாஜ மக்கள் ஆதரவு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பாஜவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:
‘ஒன்றிய அரசு தொடங்கும் திட்டத்திற்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது. ஊழலை தடுத்து மக்கள் சேவை செய்யவும் ஆந்திராவில் நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்றால் பாஜவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். போலவரம் அணை கட்ட ஒரே மாதத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கினேன். ஒரு மாதத்தில் அனுமதி வழங்கினாலும் இதுவரை சந்திரபாபு, ஜெகனால் 7 ஆண்டுகளாகியும் அணை கட்டி முடிக்க முடியவில்லை. ஆந்திராவில் ஜாமீனில் வெளியே வந்த பல தலைவர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்றார். முதல்வர் ஜெகனை சூசகமாக குறிப்பிட்டு அவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.