அண்ணாநகர்: வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரில், கூவம் ஆற்றை ஆக்கிரமித்து 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர். ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இங்குள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கூவம் சீரமைப்பு திட்டத்தின் கீழ், இங்குள்ள வீடுகளை அகற்ற மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 8ம் தேதி முதற்கட்டமாக 51 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, புளியந்தோப்பு கே.பி. பார்க்கில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், வீடுகள் ஒதுக்கப்பட்டு, மறுகுடியமர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து 9ம் தேதி 51 வீடுகள் அகற்றப்பட்டன. மீதமுள்ளவற்றில் 22 வீடுகளை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர்.