பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே குடிபோதையில் மனைவியை கணவன் குத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரம் ஆர்.ஜே.கண்டிகை சேர்ந்த கட்டிட தொழிலாளி தமிழ்மணி (42). அவரது மனைவி மங்களா (37). இவர்களுக்கு சரவணன் (14), பிரவீன் (12) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தமிழ்மணிக்கு குடி பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து அய்யனேரி சாம்ராஜ் கண்டிகையில் அவரது பெற்றோர் வீட்டில் மூத்த மகனுடன் மங்களா வசித்து வந்தார். இளைய மகன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். அய்யனேரியில் டெய்லர் கடை நடத்தி வரும் மங்களாவிடம் குடும்பம் நடத்த வரக்கோரி தமிழ்மணி அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை டெய்லர் கடைக்கு சென்றபோது அங்கு குடிபோதையில் காத்திருந்த தமிழ்மணி கையில் வைத்திருந்த கத்தியால் மங்களாவை ஆவேசமாக சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மங்களாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் கொண்டு செல்லும் வழியில் மங்களா இறந்தார்.
இது குறித்து ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் சக்திவேல் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தார். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான தமிழ்மணியை மடக்கிப்பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.