சென்னை: திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பின் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் ஏமாற்றி தலைமறைவாகி உள்ளார். அவர் விரைவில் கைது செய்யப்பட்டு அவர் மீதான நடவடிக்கை எடுக்கப்படும். ராஜேந்திர பாலாஜி பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக 236 பேரை பணியில் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் பால்வளத்துறையில் 650 பேர் முறைகேடாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனால் அதை ரத்து செய்துவிட்டு அவர்களை டிஎன்பிஎஸ்சி மூலமாகவே தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.பால்வளத் துறையில் யார், யார் முறைகேடாக பணியில் சேர்ந்துள்ளார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் களையப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.