×

'லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிபணிந்து தரமற்ற கட்டடங்கள் கட்டப்படுகின்றன': திருவொற்றியூர் சம்பவம் குறித்து விஜயகாந்த் அதிர்ச்சி..!!

சென்னை: லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அரசு அடிபணிந்து தரமில்லாத கட்டிடங்களை கட்டுவதாலேயே விபத்துகள் ஏற்படுவதாக தேமுதிக தலைவர்  விஜயகாந்த் விமர்சித்திருக்கிறார். சென்னை திருவொற்றியூர் அரிவாங்குளத்தில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. குடியிருப்பில் இருந்த 24 குடும்பத்தினரும் வெளியேறிய நிலையில் காலையில் மொத்த கட்டிடமும் சடசடவென இடிந்து விழுந்து தரைமட்டமானது. வீடுகள் அனைத்தும் இடிந்து மண்மேடாக காட்சியளிக்கிறது. 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கியுள்ளார்களா என தீயணைப்புப்படை வீரர்கள் தேடி வருகின்றனர்.

கட்டிடத்தில் இருந்த குடும்பத்தினர் முன்கூடியே வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், சென்னையை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள், மேம்பாலங்கள், அணைகள், இன்றளவும் உறுதியாக நிலைத்து நிற்கும் நிலையில், தற்போது உள்ள கட்டிடங்கள் சில ஆண்டுகளில் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகின்றன. லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அரசு அடிபணிந்து, உரிய நிதியை ஒதுக்காமல், தரமற்ற கட்டிடங்களைக் கட்டுவதாலேயே, சொற்ப காலத்தில் கட்டிடங்கள் இடிந்து விழும் அவலம் ஏற்படுகிறது.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின் முடிவில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அதனை முன்கூட்டியே அகற்ற நடவடிக்கை வேண்டும். இதன் மூலம் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிபணியாமல் உரிய நிதியை ஒதுக்கி இனிமேல் கட்டப்படும் சாலைகள், கட்டிடங்கள், மேம்பாலங்கள், அணைகள் ஆகியவற்றை தரமானதாக கட்டி முடித்து, அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Vijayakanth ,Thruvotiyur , Bribery, corruption, buildings, Vijayakanth
× RELATED தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த்...