ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாகவும் விளங்குவதால் இங்கு காட்டுமாடு, சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட பலவேறு வகை வன விலங்குகள் உள்ளன. நீலகிரி வன கோட்டத்தை பொருத்த வரை காட்டுமாடுகள் எண்ணிக்கை கணிசமான அளவு உள்ளது. இவற்றை சாலையோரங்கள், தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபட்டிருப்பதை காண முடியும். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவுக்கா வருவோரிடம் வனப்பகுதிகளுக்கு அருகாமையில் தற்காலிக டென்ட் எனப்படும் குடில் அமைத்து தங்க வைத்து அதன் மூலம் சிலர் வருவாய் ஈடுபட்டி வருகின்றனர்.
இதுபோன்று எவ்வித பாதுகாப்பு வசதிகளுமின்றி குடில்களில் தங்குவோர் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது. இந்நிலையில், கோத்தகிரி பகுதியில் சிலர், தனியார் நிலங்களில், விதிகளை மீறி, குடில்கள் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைத்து கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, பெண்கள் உட்பட 14 பேர் பாதுகாப்பற்ற அனுமதி பெறாத குடிலில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உரிமையாளர் நிவாஸ் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் கூறுகையில், அனுமதி பெறாமல் செங்குத்தான மற்றும் தாழ்வான பகுதிகளில் குடில்கள் அமைத்து, தங்க வைக்க கூடாது. இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.