×

டெல்லியில் மருத்துவர்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி எதிரொலி : நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு

டெல்லி : நீட் முதுநிலை கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை முதல் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீட் முதுநிலை கலந்தாய்வு முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு வழக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறி டெல்லியில் ஷாஹீன் பூங்காவில் இருந்து உச்சநீதிமன்றம் நோக்கி மருத்துவர்கள் பேரணியாக சென்றனர்.

அப்போது அவர்களை இடை மறித்த போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனையடுத்து இருசாராருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதில் காவல்துறையினர் 7 பேர் காயம் அடைந்ததாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, பணியில் இருந்த காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொது சொத்துகளை சூறையாடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது

மருத்துவ மாணவர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் சரோஜினி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 4000 மருத்துவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் போராட்டத்தின் போது தேசிய கீதம் பாடிய அவர்கள், அரசின் அடுக்குமுறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் மீது போலீசார் அத்துமீறி தடியடி நடத்தியுள்ளனர் என அனைத்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. மருத்துவர்களின் கைது நடவடிக்கையை கண்டித்து நாளை காலை 8 மணி முதல் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ சேவைகளில் இருந்தும் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மருத்துவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குற்றம் சாட்டி இருக்கிறார். கொரோனா போரில் பெரும் பங்காற்றி வரக்கூடிய மருத்துவர்களுடன் இணைந்து இருப்பதாக பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Tags : Delhi , டெல்லி, மருத்துவர்கள், போலீஸ் ,தடியடி
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு