புதுடெல்லி: கொரோனா பரவல் அச்சம் காரணமாக உத்தரபிரதேசம் உட்பட 5 சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து ஒன்றிய சுகாதார செயலருடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். அதனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேர்தல் நடத்தப்படுமா? தள்ளிபோகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்தஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அதற்கான முன்னேற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் வேகமாக செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். ஆனால், ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தலைவர்களின் தேர்தல் பிரசார பேரணி, மாநாடு, கூட்டங்கள் நடைபெறுமா? அல்லது 5 மாநில தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த வார தொடக்கத்தில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அளித்த பரிந்துரையில், ‘ஒமிக்ரான் பரவல் காரணமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அரசியல் பேரணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
ஒமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மூன்றாவது அலை உருவாக வாய்ப்பு உள்ளது. சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் முழுமையான அல்லது பகுதியளவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளனர். முந்தைய இரண்டாவது அலையின் போது, லட்சக்கணக்கான மக்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். 5 மாநில தேர்தல் ெநருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கொரோனா நெறிமுறைகளை மீறி பேரணிகளையும், கூட்டங்களையும் நடத்தி வருகின்றன.
இதனை தடுக்க வேண்டும்’ என்று கூறியது. இந்நிலையில், பேரவை தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநில தொற்று பரவல் நிலைமை மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசின் சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட சுகாதார அமைச்சக மூத்த அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்பு இருக்கும் என்றும்,
அதற்கு முன்னதாக நாளை உத்தரபிரதேசம் செல்லும் தேர்தல் ஆணைய குழு, அம்மாநிலத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் ஜனவரி 2ம் வாரத்திற்குள் 5 தேர்தல் அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.