திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தரிசனம் செய்வதற்கான விஐபி தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் நாளை (28ம்தேதி) மாலை 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதில் ஜனவரி 1ம்தேதியான புத்தாண்டு நாளில் பக்தர்களுக்கு 1000 விஐபி தரிசன டிக்கெட்கள் (ரூ500 கட்டணம்) ஆன்லைனில் கிடைக்கும். ஜனவரி 13ம்தேதி வைகுண்ட ஏகாதசியன்று 1000 மகா லகு தரிசனத்திற்கான (ரூ300) டிக்கெட்டுகள் கிடைக்கும்.
14ம்தேதி முதல் 22ம்தேதி வரை 9 நாட்களுக்கு தினமும் 2 ஆயிரம் டிக்கெட்கள் ரூ500 கட்டணத்தில் கிடைக்கும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மற்ற நாட்களுக்கான விஐபி தரிசன டிக்கெட்டுகள் ரூ500 கட்டணத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு நாளைக்கு 200 டிக்கெட்டுகளும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 300 டிக்கெட்கள் என ரூ500 கட்டணத்திலும் கிடைக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.
இவற்றில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்காக 13ம்தேதி முதல் 22ம்தேதி வரை தினமும் 5 ஆயிரம், மற்ற நாட்களில் தினமும் 10 ஆயிரம் டிக்கெட்கள் என 1லட்சத்து 60 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. அனைத்து டிக்கெட்டுகளையும் பக்தர்கள் 15 நிமிடத்தில் முன்பதிவு செய்தனர்.