×

மணல் திருட்டை தட்டி கேட்ட திமுக பெண் கவுன்சிலரை கொல்ல முயற்சி: விருதுநகரில் பரபரப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மணல் திருட்டை தட்டிக்கேட்ட திமுக பெண் கவுன்சிலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் வனப்பகுதியில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சுந்தரராஜபுரம் பகுதியில் விவசாய நிலத்தின் வழியாக மணல் திருட்டு நடப்பதாக, அப்பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் நேற்று புகாரளித்துள்ளார்.

அதன்பின், இவர், தனது மகளும், திமுக மாவட்ட கவுன்சிலருமான முத்துச்செல்வியுடன் காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (35), அவரின் சகோதரர் முனீஸ்வரன் (32) இருவரும் முத்துசாமியை கம்பால் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், முனியாண்டி டூவீலரில் வேகமாக வந்து முத்துச்செல்வி மீது மோதி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில், முத்துச்செல்விக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி மற்றும் முனீஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணல் திருட்டை தடுக்க முயன்ற திமுக மாவட்ட பெண் கவுன்சிலர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thimuka ,Vardhagar , Attempt to kill DMK woman councilor over sand theft: Violence in Virudhunagar
× RELATED “வீழட்டும் பாசிசம், வெல்லட்டும்...