டெல்லி : நாட்டிலேயே சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலமாக கேரளா திகழ்கிறது என்று ‘நிதி ஆயோக்’ வெளியிட்டுள்ள சுகாதார தரவரிசை பட்டியல் மூலம் தெரிவித்துள்ளது. இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறையின் நிலை குறித்து நிதி ஆயோக் கணக்கிட்டு தரவரிசை ஒன்றை வெளியிட்டு வருகிறது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை 23 காரணிகளை கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்தத் தரவரிசையை நிதி ஆயோக், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டுகிறது.
இந்தத் தரவரிசையில் நாட்டிலுள்ள மாநிலங்களை பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தப் பிரிவில் கடைசி இடத்தில் உத்திரபிரதேசம் உள்ளது. இதற்கு முன்பு பிகார் மற்றும் ஒடிசா இடம்பெற்றுள்ளன. சிறிய மாநிலங்கள் பட்டியலில் மிஷோரம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது. டெல்லி மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகியவை கடைசி இடங்களை பிடித்துள்ளது.