×

செங்கம் அருகே சோழர், விஜயநகர நாயக்கர் காலத்து நீர் மேலாண்மை கல்வெட்டுகள் கண்டெடுப்பு-கி.பி. 9ம் நூற்றாண்டில் ஏரி சீரமைத்த தகவல் உள்ளன

திருவண்ணாமலை : செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூரில் நீர் மேலாண்மை தொடர்பான விபரங்கள் அடங்கிய சோழர் காலம் மற்றும் விஜயநகர நாயக்கர் காலத்து கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, மேல்பென்னாத்தூர் கிராமத்தில் பெரிய ஏரி அருகே உள்ள பாறையில் கல்வெட்டு எழுத்துக்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன், பழனிசாமி, மதன்மோகன் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, ஏரி அருகே உள்ள பாறை கல்வெட்டில் 14 வரிகளில் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த கல்வெட்டு குறித்து கல்வெட்டு ஆய்வாளர் சு.ராஜகோபால் ஆய்வு செய்தார். அப்போது, முதலாம் பராந்தக சோழனின் 20வது ஆட்சி ஆண்டில்(924ம் ஆண்டு) இந்த கல்வெட்டு செதுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆய்வாளர் சு.ராஜகோபால் தெரிவித்ததாவது:

மணியக்கல்லை சேர்ந்த குணவரன் அம்பலவன் மாதேவன் என்பவர் ஏரி கிணறு அமைத்து விளை நிலங்கள் உண்டாக்கியுள்ளார். அவற்றை, வலிகண்டப்படையார் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டு, ஏரிக்கு அப்படையின் பெயரை வைத்திருக்கிறார்.அந்த ஏரிப்பாசனத்தில் உள்ள பெரிய விளைச்சல் நிலத்தை, தனது பெயரிட்டு குணவரன் மாதேவி என்று அழைத்திருக்கிறார். படையின் பயன்பாட்டிற்காக கிணற்றின் கிழக்கில் அமைந்த கீழைப்பட்டி என்ற நிலத்தினை, படையில் உள்ள அம்பலத்தரையன் என்பவருக்கு பூவில் நீர்வாத்து கொடுத்துள்ளார். கிழமைப்பட்டி என்ற சொல்லுக்கு உரிமை பொருள் என்பது அர்த்தமாகும்.இந்த கல்வெட்டின் முதல் 3 வரிகளின் வலதுப்புறம் சற்று சிதைந்துள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ள மணியக்கல் என்பது தற்போதைய மணிக்கல் கிராமமாக இருக்கலாம். புன்னாத்தூர் என்பது தற்போது மேல்பென்னாத்தூர் என்று மருவியதாக தெரியவருகிறது. மேலும், இந்த ஊரின் காந்திநகர் ஏரி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டை ஆய்வு செய்ததில், ஏரிக்கரை அருகே உள்ள இரண்டு பெரிய பாறைகளில் 40 வரிகளில் விஜயநகர காலத்தை சேர்ந்த கல்வெட்டு என்பது உறுதியானது. இந்த கல்வெட்டு 1538ம் ஆண்டில் விஜயநகர அரசர் அச்சுத தேவமகாராயர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது.

செயங்கொண்ட சோழ மண்டலத்து செங்குன்ற கோட்டத்து பெண்ணை, வடகரை ஆடையூர் நாடு செங்கந்தப்பட்டில் இருக்கும் துளுவ நாயக்கரான மஞ்சுநாயக்கர் மகன் தேவப்ப நாயக்கருக்கு அண்ணாநாட்டு தனியூர் திருவண்ணாமலை மாளிகை மடத்து முதலியார் அளித்த தானத்தின்படி என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், செங்கந்தப்பட்டு புத்தேரி உடைந்து நெடுநாள் ஆனதால், ஏரி காடுபோல் மாறியிருக்கிறது. எனவே, ஏரியை வெட்டி உடைப்புகளை சரிசெய்து கிணறு வெட்டி, சீர்திருத்தம் செய்யும் துரிஞ்சிப்படைக்கு நிலம் தானம் வழங்கிய விபரமும், அதன் நான்கு புற எல்லையும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 2 கல்வெட்டுகளிலும் ஏரியை வெட்டி, சீர் செய்து, தொடர்ந்து பாதுகாக்க நிலம் தானம் அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இக்கல்வெட்டுகளில், ஊர் பெயர்களும் நில தானங்களும் பற்றிய குறிப்புகள் கிடைத்திருக்கின்றன.நீர்நிலைகளை பாதுகாக்க, அவற்றை மேலாண்மை செய்ய, அந்த காலத்தில் அரசர்கள், அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, இந்த கல்வெட்டுக்களை தொல்லியல் துறை பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Chola ,Sengam , Thiruvannamalai: Chola period and Vijayanagara containing details of water management at Sengam next Melpennathur
× RELATED நுளம்பர் பாணி நுணுக்கத்தூண்கள்