×

ஆன்மீக மாநாடுகளில் இன ஒழிப்புப் பேச்சுகளால் பல லட்சம் முஸ்லீம்களின் உயிருக்கு ஆபத்து : தலைமை நீதிபதிக்கு 76 மூத்த வழக்கறிஞர்கள் கடிதம்!!

டெல்லி : ஹரித்வார், டெல்லி ஆன்மீக மாநாடுகளில் இடம்பெற்ற இன ஒழிப்புப் பேச்சுகளால் பல லட்சம் முஸ்லீம்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மூத்த வழக்கறிஞர்கள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர். துஷ்யந்த் தவே, பிரசாந்த் பூஷன், விருந்தா குரோவர், சல்மான் குர்ஷித், அஞ்சனா பிரகாஷ் உள்ளிட்ட 76 மூத்த வழக்கறிஞர்கள் இணைந்து தலைமை நீதிபதி எம்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஹரித்வார், டெல்லி மாநாடுகளில் இடம்பெற்ற பேச்சு வெறும் மத வெறுப்புணர்வு பேச்சு மட்டுமல்ல, ஒரு இனத்தையே ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்க செய்வதற்காக பகீரங்க அழைப்பு என்று குறிப்பிட்டுள்ளனர். இது நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மட்டுமின்றி லட்சக்கணக்கான முஸ்லீம்களின் உயிருக்கும் இது ஆபத்தானது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அவ்வாறு இனப் படுகொலை செய்ய அழைப்பு விடுத்த நபர்கள் பட்டியலையும் தங்கள் கடிதத்தில் அவர்கள் இணைத்துள்ளனர். காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இது போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி விடாமல் தடுக்க உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட வேண்டும் என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணாவை மூத்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர். 


Tags : Muslims , ஹரித்வார், டெல்லி
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...