சென்னை: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளை விரைந்து தொடங்கவும், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதற்கும் தமிழக அரசு தேவையான ஒத்துழைப்பு அளித்து வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கை: தலைமைச் செயலாளர் அளவில் 13.7.2021 அன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளில் தொடர்புடைய துறைகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மாவட்ட கலெகடர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு, மண் எடுப்பிற்கு அனுமதி அளிக்கவும், நில எடுப்பில் தனிக் கவனம் செலுத்தி, பணிகளுக்கு தேவைப்படும் நிலம் கையகப்படுத்துவதை துரிதப்படுத்தி தேவையான நிலத்தை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நல்ல முன்னேற்றம் இப்போது ஏற்பட்டுள்ளது.
மேலும், 12.9.2021ம் தேதி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் , வருவாய்த்துறை அமைச்சர், வனத் துறைஅமைச்சர்,மின்சாரத்துறை அமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகிய அமைச்சர்களுக்கும், சம்பந்தப்பட்ட துறை செயலர்களுக்கும் கடிதம் மூலம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகள் தடையின்றி மேற்கொள்ள கோரியுள்ள அனுமதிகளை உடனடியாக வழங்குமாறு கோரப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு 17.9.2021ம் தேதி எழுதிய நேர்முகக் கடிதத்தின் அடிப்படையிலும், புதுடில்லியில் 12.10.2021 அன்று நடைபெற்ற ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம், மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நடத்திய சந்திப்பின்போது எடுத்துரைக்கப்பட்ட திட்ட பணிகள் துரிதப்படுத்துதலின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு 23.10.2021 அன்று தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகள் வாரியான நிலுவையில் உள்ள அனுமதிக்கான இனங்களை பட்டியலிட்டு, உடன் நடவடிக்கை மேற்கொண்டு அனுமதி அளிக்க வகை செய்து பணிகள் தடையின்றி நடைபெற கோரப்பட்டது.
மேலும், அரசு முதன்மை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை தொடர் ஆய்வுக் கூட்டம் நடத்தி, மாவட்ட கலெக்டர்களுக்கு மண் எடுப்பிற்கான அனுமதி, நில எடுப்பில் உள்ள குறைகளை களைந்து பணிகள் தாமதப்படாதவண்ணம் துரிதப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளார். வனத்துறை, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நீர்வளத்துறைகளின் அனுமதிக்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்துள்ள கடிதத்தின்படி அனுமதிக்கான நிலை குறித்தும் துறை சார்பாகவும், ஒருங்கிணைத்தும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றன. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இதுவரை ஆறு ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. பல்வேறு அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கேரள எல்லையிலிருந்து கன்னியாகுமரி வரை மற்றும் நாகர்கோவில் சாலைப் பணிகள் இரு தொகுப்புகளாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தலைமையில் 16.12.2021 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சமீபத்திய பெருமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால், மண் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினர். மேலும், மாற்று ஏற்பாடாக, தனியார் நிலத்தில் மண் எடுக்க ஒப்பந்ததாரர்கள் இடம் தேர்வு செய்யவும் அதனடிப்படையில் விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார், அமைச்சர், ஒப்பந்ததாரர்களின் கடிதம் பெறப்பட்டவுடன் பணிகள் பாதிக்காத வண்ணம் உடன் அனுமதி அளிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க ஏதுவாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சரால், தலைமைச் செயலாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் மூலம் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பணிக்கான தடைகள் களையப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.