×

நடப்பாண்டில் முதன் முதலாக பூண்டி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது

சென்னை: பூண்டி நீர்த்தேக்கம் இந்த ஆண்டு முதல் முதலாக 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக ஆந்திரா மாநிலம் அம்மம்பள்ளி அணையிலிருந்து வந்த நீர் மற்றும் பூண்டியை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பியதால் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்திற்கு கடந்த ஒன்றரை மாதங்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. தற்போது 35 அடி உயரத்திற்கும் தண்ணீர் நிரம்பியுள்ளது. தற்போது 3,231 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. தற்போது பூண்டி நீர்தேக்கத்திற்கு வினாடிக்கு 764 கனஅடி நீர் வரத்து உள்ளது.

இதனால்  நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 83 கனஅடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில்  வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்க இணைப்புக்  கால்வாய் வழியாக வினாடிக்கு 424 கன அடி நீரும், பேபி கால்வாய் வழியாக  வினாடிக்கு 14 கன அடி நீரும் என மொத்தம் 438 கன அடி நீர் அனுப்பப்பட்டு  வருகிறது. பூண்டி நீர்த்தேக்கம் இந்த ஆண்டு முதன்முதலாக முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.

Tags : Boondi Reservoir , Boondi Reservoir, full capacity,
× RELATED பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து...